ஷேக் அபுல் ஹஸன் ஷாதிலி (கி.பி.1196/1197-1258) அவர்களின் பெயரிலிருந்தே ‘ஷாதிலி தரீகா’ பெயர்பெற்றுக் கொண்டது. வடக்கு மொரோக்கோவில், ஸியூட்டா எனும் நகருக்கருகில் “கிமாரா” எனும் சிற்றூரில், ஒரு விவசயத் தொழிலாளிக் குடும்பத்தில் அன்னார் பிறந்தார்கள். அன்னார் இஸ்லாமியச் சட்டவியலை (ஃபிக்ஹ்) ஃபெஸ் (Fez) எனும் நகரில் சிறந்து விளங்கும் கராவிய்யின் பல்கலைக்கழகத்தில் பயின்றார்கள். தொடர்ந்து அன்னார் பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்கள். இராக் நாட்டில் சூஃபி ஷேக் வாஸித்தி என்பவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் அன்னாரை தங்கள் சொந்த நாடான மொரோக்கோவுக்கே திரும்பச் சென்று, மொரோக்கோவின் ஆன்மீக மாமேதையான மௌலே அபுஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களைக் காணுமாறு பணித்தார்கள். அன்னார் அவ்வாறே செய்து, அம்மஹானிடம் இறை தியானத்தின் தீட்சையைப் பெற்று, தன்னை மிக நெருங்கிய சீடராக்கிக் கொண்டார்கள். ஷேக் மௌலே அபுஸ்ஸலாம் அவர்களைச் சந்திக்கும் தருணத்தில், சம்பிராதயமாகத் தங்களை முழுவதும் கழுவிச் சுத்தம் செய்தவர்களாகப் பின்வருமாறு இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்: “யா அல்லாஹ், இது நாள் வரையிலும் நான் பெற்றிருந்த அறிவையும், அறச்செயல்களையும் என்னிலிருந்து கழுவிச் சுத்தம் செய்கிறேன். ஏனெனில், இவ்வாசிரியப் பெருந்தகையிடமிருந்து இனிமேல் கிடைக்கப் போவதைத் தவிர என்னில் வேறொன்றும் இருக்கக்கூடாது.”
ஷேக் அபுல் ஹஸன் ஷாதலி அவர்கள் மொரோக்கோவிலிருந்து ஸ்பெய்ன் வரைக்குமாகப் பயணித்து விட்டு இறுதியில் எகிப்தில் அலெக்ஸான்டிரியா நகரில் குடியமர்ந்தார்கள். அன்னாரின் வாழ்வின் பிற்பகுதியில், தங்களின் ஆன்மீக ஆசான் யாரென வினவிய போது, அவர்களின் வழக்கமான பதில் பின்வருமாறு இருந்தது: “நான் மௌலே அபுஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களை நெருங்கிப் பின்பற்றுபவனாகவே இருந்து வந்தேன். ஆனால் ஒருபோதும் மனித ஆசான்களின் சீடராக இருந்ததில்லை”
ஷேக் அபுல் அப்பாஸ் முர்ஷி (இறப்பு கி.பி.1288) அவர்கள் ஷேக் ஷாதிலி அவர்களுக்குப்பின், ஷாதிலி தரீக்காவின் ஆன்மீக ஆசானாக இருந்தார்கள். அவர்களிடம் ஷேக் ஷாதிலி அவர்களின் அறிவுஞானத்தைப் பற்றிக் கேட்கப்பட்ட போது,”அவர்கள் நாற்பது வகையான அறிவியல்களை எனக்கு வழங்கியிருந்தார்கள். அன்னார் கரைகடந்த சமுத்திரமாகத் திகழ்ந்தார்கள்” என பதிலளித்தார்கள்.
அலெக்ஸாண்டிரிய மற்றும் கெய்ரோ ஆகிய இரு நகர்களிலும் ஷேக் ஷாதிலி அவர்களை நெருங்கிப் பின்பற்றுபவர்கள் நூற்றுக்கணக்கில் இருந்தனர். அவர்களில் பொதுமக்கள் மட்டுமின்றி ஆளும் வர்க்கத்தினர்களும் அடங்குவர். அன்றாட சாதாரண உலகியல் வேலைகளுக்கிடையே, தியானத்தையும், இறைவனை நினைவுகூர்தலையும் கடைபிடித்து ஒழுகும்படி அவர்களை நெருங்கிப் பின்பற்றுபவர்களுக்கு போதித்து வந்தார்கள். அவர்களைப் பின்பற்ற விழையும் எவரும் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடாதவர்களாயிருப்பின், அப்படிப்பட்டவர்களுக்கு தீட்சை வழங்குவதை அன்னார் விரும்பமாட்டார்கள். இஸ்லாமிய வாழ்வைத் தங்களின் சொந்த உலக வாழ்வில் நடைமுறைப்படுத்துவதோடு, தற்போது இருந்து கொண்டிருக்கும் நிலையிலிருந்து ஒரு உன்னத மாற்றம் பெறவேண்டுமென, தங்களைப் பின்பற்றுபவர்களுக்கு கண்டிப்போடு அறிவுறுத்தி வந்தார்கள்.
ஷேக் அபுல் ஹஸன் ஷாதிலி அவர்களின் எழுத்தாக்கங்களில் மிகப் பிரபலமான இறைப் புகழ்மாலை “ஹிஸ்புல் பஹர்” என்பதாகும்.