நிஸ்பத் எனும் அரபிச்சொல்லின் பொருள், இருவரிடையே உள்ள உறவு அல்லது இணைப்பு என்பதாகும். சூஃபிகளின் சொல்லகராதியில் அது இறைவனுக்கும், மனிதர்களுக்குமிடயே உள்ள பந்தத்தைக் குறிக்கிறது. சூஃபித்துவத்தின் சாராம்சம் என்னவெனில், ஒருவர், ஒரு சில நல்லொழுக்கப் பண்புகளை அல்லது சிறப்பம்சத்தை தன்னுள்ளே எந்த அளவு வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், அச்சிறப்பம்சமே அவனை முற்றிலும் வியாபித்த நிலையில் அவனை முழுவதுமாக ஆட்கொண்டுவிட வேண்டும். எப்போது அப்படிப்பட்ட சிறப்பம்சம் அவனது இன்றியமையாத ஒரு பகுதியாக ஆகிவிடுகிறதோ, அதுவே ‘அகமிய பந்தம்’ (நிஸ்பத்) என்றழைக்கப்படுகிறது. இவ்வான்மீக வேட்கையின் குறிக்கோளே, இத்தகைய அகமிய பந்தத்தை அடைதலாகும்.
நிஸ்பத் எனும் பந்தங்களில் பலவகை உண்டு. அழகிய செயல்முறைகளின் பந்தம், தூய்மை பந்தம், ஆழ்ந்த இறைக்காதலின் பந்தம், ஆன்மீகப் பரவசப்பந்தம், ஒருமைப்பாட்டுப் பந்தம், அமைதியின் பந்தம் மற்றும் பிறர் மத்தியில் நினைவு கூரலின் பந்தம் ஆகியனவாம். ஆயினும், இந்த பந்தங்கள் யாவும் சூஃபி பயிற்சிகளை மேற்கொள்வதால் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது எனக்கருதுவது சரியன்று. இந்தப் பயிற்சிகள் யாவும் இவைகளை அடைந்து கொள்ள உதவும் கருவிகள் மட்டுமே. உண்மையில் இவை யாவும் இறைவனின் வெகுமதியாகும், அதனைத் தான் நாடுபவர்களுக்கு, அவர்களின் ஆன்மீகப்பரம்பரையைக் கருத்தில் கொள்ளாது, அவன் வழங்குகிறான். இது குறித்து, ஹஜ்ரத் பஹாவுத்தீன் நக்ஷ்பந்த் அவர்களின் விளக்கம் மிக விரிவாக அமைந்திருக்கிறது. யாரோ ஒருவர் அன்னாரின் ஷைகுமார்களின் பரம்பரையைப் பற்றிக் கேட்டபோது, அவர்களின் பதில்,” எனது ஷைகுமார்களின் பரம்பரையின் மூலம் நான் இறைவனை அடையவில்லை. இறைவன்பால் கவர்ந்திழுக்கும் ஒருவகை ஈர்ப்பு சக்தி எனக்கு வழங்கப்பட்டது. அதுவே என்னை இறைவன் வரை கொண்டு சேர்த்தது”.
நபித்தோழர்களும், பிந்தைய காலத்தில் பெருமானாரைப் பின்பற்றி ஒழுகியவர்களும், இந்த அகமிய பந்தத்தை வேறு வழிகளில் பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து முறையாக நிறைவேற்றி வரும் ஐங்கால வணக்க வழிபாடுகள், உபரியான வணக்கங்கள், சதா இறைவனைப் புகழாரம் செய்தல், புனிதக் குர்ஆனை ஓதுதல், மரணத்தை நினைவு கூர்தல் மேலும் நீதித் தீர்ப்பு நாளின் பயம் ஆகியவைகள் இறைநெருக்கம் கிடைக்க வழிவகுக்கும் தன்மைகளை அவர்களில் ஏற்படுத்தி, அவர்களின் உள்ளங்களில் அவை ஆழமாகப் பதியக்காரணமாகி விட்டன. இந்த உயரிய பந்தத்தை தங்களின் எஞ்சியுள்ள வாழ்நாளில் மிகப் பேணுதலாகப் பாதுகாத்து வந்தனர். இதே வழிமுறைதான் பெருமானார் நபி(ஸல்) அவர்கள் முதல் பல்வேறுபட்ட சூஃபித்தொடர்களின் ஆசான்கள் வரைக்கும் வந்தடைந்துள்ளது.